வேளாண்மை
ஒரு நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் அதன் பொருளாதாரம் கனிம வளம், இயற்கை வளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. உணவை உற்பத்திச் செய்வதும் கால்நடைகளை வளர்ப்பதும் வேளாண்மை ஆகும். வேளாண்மை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணி போன்றது எனலாம். மக்களின் அத்தியாவசியமான உணவுப் பொருள்களை உற்பத்திச் செய்கிறது. நாட்டின் பணவீக்கத்தைத் தவிர்க்க வேளாண்மை உதவுகிறது. வேளாண் மூலப்பொருளால் தொழில் துறை வளர்கின்றது. வேளாண்மை ஒரு நாட்டின் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்கிறது. தொடக்கக்காலங்களில் உணவைத் தேடி அலைந்த மனிதன் சமூகமாக வாழ்வதற்குக் கற்றுக் கொண்டான். மனிதன், தேவைகள் அதிகரிக்க வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்யத் தொடங்கினான். தொடக்ககாலங்களில் ஆற்றோரங்களில், நீர் வளம் அமைந்த பகுதிகளில் ஆரம்பமான வேளாண்மை, உலோகத்தின் பயன்பாட்டுக்குப் பின் பல இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. மனிதர்கள் தனது தேவைக்குப் போக எஞ்சிய உணவுப் பொருள்களைக் கால்நடைகளுக்கு உணவாகக் கொடுத்தனர். வேளாண்மை செய்ய கால்நடைகள் உதவின. மேலும், மனிதனுக்கும் கால்நடைகளால் பால், இறைச்சி, தோல், உரோமம், உரம் போன்ற பல்வேறு பயன்கள...