புறப்பாட நடவடிக்கையினால் ஏற்படும் நன்மைகள்
இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே மற்ற திறன்களைக் கைவரப் பெறுவதற்கும் மறைந்து கிடைக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகள் பெரிதும் துணைபுரிகின்றன.
சீருடை இயக்கங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள முடிகிறது. உதாரணமாக, கூடாரம் அமைத்தல், அணிவகுப்புப் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் பொழுது மாணவர்கள் பிறரை மதித்தல், ஒற்றுமை, கட்டொழுங்கு, தன்னம்பிக்கை, நாட்டின் மீது விசுவாசம், பிறர்பால் அன்பு செலுத்துதல் போன்ற நற்பண்புகளை மேலோங்கச் செய்கின்றன. மாணவர்கள் ஒரு சிறந்த நற்குடிமகனாகத் திகழ புறப்பாட நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
தொடர்ந்து, மொழிக்கழகங்களில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் அவர்களின் மொழியாற்றலை வளர்த்துக் கொள்வதுடன் தலைமைத்துவ பண்பும் மேலோங்குகிறது. எடுத்துக்காட்டாக, மாணவர்கள் கழகங்களில் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் மொழியாற்றலை வெளிப்படுத்த வழிவகுக்கின்றது. அதுமட்டுமின்றி, மொழிக் கழகத்தில் மாணவன் தலைவர் பொறுப்பு வகிக்கும் பொழுது அவனுள் தன்னொழுக்கம், பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல் போன்ற பண்புகள் இணைந்தே வளர வாய்ப்புண்டு.
உடல் நலத்தைப் பேண விளையாட்டு முக்கியமானதாக விளங்குகிறது. புறப்பாட நடவடிக்கையில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் உடலை உறுதி செய்து கொள்ள முடிகிறது. ஆகவே, உடலினை உறுதி செய் எனும் புதிய ஆத்திச்சூடியைப் போன்று மாணவர்கள் உடல் நலத்துடன் திகழ முடிகின்றது.
மேலும், மாணவர்கள் விளையாட்டில் தங்களின் திறனை வெளிப்படுத்தவும் முடிகிறது. உதாரணமாக, நமது நாட்டுப் பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வேய் ஒரு நேர்காணலில் தனது இந்த வெற்றிக்குக் காரணம் தனது சிறுவயதிலிருந்தே புறப்பட நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் என கூறினார்.
ஆகவே, ஒரு சிறந்த ஆரோக்கியமான மனிதனை உருவாக்குவது பள்ளிப் புறப்பட நடவடிக்கையாகும். நற்பண்புள்ளவனாகவும், தன்னலம் கருதா மாந்தனாகவும் உருவாக பள்ளிப் புறப்பட நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றது.
Comments